Friday, March 6, 2009

கிரெடிட் கார்டுடன் என் அனுபவங்கள்!



கடந்த 5 வருடத்திற்கு மேலாக கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டை உபயோகித்து வந்தேன்! அதில் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒருவருக்கேனும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்த பதிவு!

என் அலுவலகத்தின் வெளியே தற்காலிக கடைக் கட்டி கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் நீண்ட யோசனைக்குப் பிறகு சென்று, ஒரு சுபயோக சுப தினத்தில் கிரெடிட் கார்டுக்கான படிவத்தை வாங்கி கையெழுத்து மட்டும் போட்டேன். மற்றதை அவர்களே பூர்த்தி செய்து கொண்டார்கள்! ஒரு புகைப்படமும், என் சம்பள ரசீதையும், முகவரிக்கான சான்றையும் கொடுத்தேன்! கூவி கூவி விற்று கொண்டிருந்ததால் உடனே கொடுத்து விடுவார்கள் என்று நினைத்திருந்தேன்! ஆனால் அவர்கள் நான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்து அந்த முகவரியில்தான் இருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொண்டே தபாலில் கிரெடிட் கார்டு அனுப்பி வைத்தார்கள்!

கார்டு வந்தவுடன் அவர்களின் இணைய தளத்திற்கு சென்று பதிவும் செய்து கொண்டேன்! அந்த கிரெடிட் கார்டில் முன் பக்கத்தில் என் பெயரும், அந்த கிரெடிட் கார்டு எந்த மாதம்/வருடம் வரை உபயோகிக்கலாம் என்ற விபரமும், நான்கு நான்கு பிரிவாகப் பிரித்து 16 இலக்கங்களில் கிரெடிட் கார்டு எண்ணும் இருந்தது. பின் புறத்தில் என் கையொப்பத்தை இட்டேன். அங்கே மூன்று இலக்கங்களில் CVV (CARD VERIFICATION VALUE CODE) எண் இருந்தது. பின் ஒரு வாரத்தில் தபாலில் நான்கு இலக்க PIN நம்பரும் வந்தது!


ஆண்டு கட்டணம் என்று எதுவும் இல்லை. இப்பொழுதெல்லாம் அனைத்து வங்கிகளுமே இலவசமாகவே கிரெடிட் கார்டு அளிக்கிறார்கள்.


கிரெடிட் லிமிட்:
என் வருமானத்திற்கு ஏற்ப 35000 ரூபாய் எனக்கு லிமிட்டாக கொடுத்திருந்தார்கள். இதில் அதிகபட்சம் 14000 ரூபாய் வரை நான் பணமாக எடுத்துக் கொள்ள முடியும். ATM சென்று அந்த நான்கு இலக்க PIN ஐ உபயோகித்து இந்த பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அப்படி எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு ATM சேவை கட்டணமாக எடுத்துக் கொள்வார்கள். மேலும் அன்றிலுருந்தே வட்டி கணக்கிட ஆரம்பித்து விடுவார்கள். இதுவே நீங்கள் கடைகளில் பொருட்களாக வாங்கினால் குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள்.

இங்கே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? அதாவது மாதம் ஒரு முறை நமக்கு பில் அனுப்புவார்கள். எடுத்துகாட்டாக எனக்கு ஒரு
மாத பில் என்பது சென்ற மாத 3 ஆம் தேதியிலிருந்து இந்த மாத 2 ஆம் தேதிவரை. இதற்கான பில் தொகையை இந்த மாத 22 ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். எனவே சென்ற மாதம் 3 ஆம் தேதி நீங்கள் ஒரு பொருளை வாங்கி இருந்தால் அதற்கான தொகையை 50 நாட்கள் கழித்து இந்த மாதம் 22 ஆம் தேதிக்குள் கட்டி விட வேண்டும். அதுவே இந்த மாதம் 2 ஆம் தேதி நீங்கள் ஒரு பொருளை வாங்கி இருந்தால் அதை 20 நாட்கள் கழித்து இந்த மாதம் 22 ஆம் தேதியே செலுத்தி விட வேண்டும். இதைதான் குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள் என்று சொன்னேன்.


இவ்வாறு அனுப்பும் மொத்த பில் தொகையில் குறைந்த பட்சம் 5 சதவீதம் கட்டினால் போதும் என்பார்கள். மீதமுள்ள தொகையை வட்டி போட்டு அடுத்தடுத்த மாதங்களில் நீங்கள் செலுத்தலாம். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பில் தொகை மொத்தமாக செலுத்தினால் மட்டுமே "குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள்" என்பது நீங்கள் தொடர்ந்து வாங்கும் பொருட்களுக்கு பொருந்தும். அதாவது சென்ற மாத பில் தொகை அனைத்தும் நீங்கள் செலுத்தி இருந்தால் மட்டுமே இந்த மாதத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு வட்டி கணக்கிட மாட்டார்கள், இல்லை எனில் பொருட்கள் வாங்கிய தினத்திலிருந்தே வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள்.


கடைகளில் கிரெடிட் கார்டு:
கடையில் பொருட்கள் வாங்கும் பொது நமது அட்டையை அதற்குரிய கருவியில் தேய்த்து தொகையை நமது கணக்கில் சேர்த்து விடுவார்கள். 2 பில் கொடுப்பார்கள். ஒரு பில்லை கையொப்பம் இட்டு அவர்களிடம் கொடுத்து விட்டு மற்றொரு பில்லை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். சில கடைகளில் 1 அல்லது 2 சதவீதம் சேவை கட்டணமாக வசூலிப்பார்கள். மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் போது சேவை கட்டணம் இருக்கும்.

இணையத்தில் உபயோகிக்கும் முறை:
இணையத்தில் உபயோகிக்கும் போது 16 இலக்க கிரடிட் கார்டு நம்பரையும் 3 இலக்க CVV நம்பரையும் கொடுக்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங், ரயில் டிக்கெட், விமான டிக்கெட் போன்றவற்றிற்கு பயன் படுத்தலாம்.

இவ்வாறு நாம் ஷாப்பிங் செய்யும் விபரங்களை உடனக்குடன் இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் தவறு இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் தெரியப் படுத்தி சரி செய்து கொள்ள முடியும்.

நான் கவனத்தில் கொண்டது
1) அந்தந்த மாதத்திற்கான பில் தொகையை முழுவதுமாக கட்டி வட்டியை தவிர்த்து விடுவேன். அவர்கள் வட்டி கணக்கிடும் முறையை நம்மால் அறிந்து கொள்வது மிகவும் கடினம்.

2) கூடுமான வரை கிரெடிட் கார்டு ஐ பயன்படுத்தி பணம் எடுப்பதை தவிர்த்து விடுவேன்.

3) எனது அலுவலக கணினியைத் தவிர வேறு எந்த கணினியையும் கிரெடிட் கார்டுக்காக உபயோகிக்க மாட்டேன். ப்ரொவ்சிங் சென்டர் மிகவும் அபாயகரமானது.

4) மொஜில்லா ப்ரோவ்செரை (Mozilla Browser) மட்டுமே உபயோகிப்பேன். உபயோகித்தவுடன் ப்ரொவ்ஸெர்லிருந்து அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் நீக்கி விடுவேன், ஒவ்வொரு முறையும்.

5) கிரெடிட் கார்டு தானே என்று அளவுக்கு மீறி செலவு செய்ய மாட்டேன்.

6) அவ்வப்போது கஷ்டமெர் கேர் சென்டெரில் இருந்து ஏதேனும் ஆப்பஃர் (Offer) தருவதாக அழைத்தால் கூடுமான வரை தவிர்த்து விடுவேன்.

பலன்கள்:
1) அவசரமாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க வேண்டிய போது நமது கையில் பணம் இல்லாதபோது மிகவும் உபயோகமாக இருக்கும்.

2) அவசரமாக பணம் தேவைப்படும் போது, நமது நண்பர்களிடமே கேட்க கூச்சப்படும் போது இது மிகவும் உதவி செய்யும்.

3) வெளியூர் சென்றிருக்கும் போது ஏதேனும் அவசரத் தேவை எனில் ஆபத்பாந்தவனாக உதவும்.

4) நாம் செலவு செய்யும் ஒவ்வொரு 50 ரூபாய்க்கும் 1 பாயிண்ட் கிடைக்கும். இந்த பாயிண்ட்களை பயன்படுத்தி நமக்கு தேவையான பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

முடிவாக
கிரெடிட் கார்டு என்றவுடன் எதோ என்னமோ என்று பயப்படத் தேவையில்லை. நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே இதன் பலன் தெரியும். கட்டுப்பாடான மனம் உள்ளவர்கள் மட்டுமே எந்த வித தொந்தரவும் இன்றி பயன் படுத்தலாம். கட்டுப்பாடான மனம் இல்லை எனில் கண்டிப்பாக கிரெடிட் கார்டை தவிர்த்து விடுவது புத்திசாலித்தனமானது. கிரெடிட் கார்டால் ஏற்படும் நன்மை தீமை அனைத்துமே உங்கள் கையில் தான் இருக்கிறது. அளவுக்கு மீறி செலவு செய்து விட்டு, பணம் கட்டாமல், வட்டி மேல் வட்டி ஏறி, பின் வங்கிகளை குற்றம் சொல்லி பயன் இல்லை. கிரெடிட் கார்டு மோசடியால் கோடிக்கணக்கான பணம் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் சொல்கிறது.


டிஸ்கி: நான் பயன்படுத்திய கிரெடிட் கார்டு எஸ்.பீ.ஐ. தற்பொழுது நான் என்னுடைய கிரெடிட் கார்டை கேன்சல் செய்து விட்டேன். ஒரு தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் கேன்சல் செய்து விட்டேன். மற்றபடி என்னை பொறுத்தவரை மிகவும் உபயோகமாகவே இருந்தது.

10 comments:

mohanpuduvai said...

Very Good Information

LOGU said...

i also affected by that private insurance company .. but everyone told (marketing people & bank manager ) it will solved.. but more than 2 months i am waiting with out any purchase.. but after that issue i want to cancell this card

Mohan said...

வாங்க Viji, mohan, Logu தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Mohan said...

// Logu said...
i also affected by that private insurance company .. but everyone told (marketing people & bank manager ) it will solved.. but more than 2 months i am waiting with out any purchase.. but after that issue i want to cancell this card//
கூடுமானவரை கிரெடிட் கார்டு மூலமாக தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை தவிர்த்திடுங்கள். பெரும்பாலும் உங்களை சமாதானப் படுத்தி அதை உங்கள் தலையில் கட்ட வற்புறுத்துவார்கள். நீங்கள்தான் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.

Anonymous said...

நானும் உங்க கேஸ் தான். எஸ்.பி.ஐ. கார்டு கடந்த 2 வருடங்களாக பயன்படுத்திவருகிறேன்.

ஒழுங்காக கட்டி வருவதால், கடந்த வாரத்திலிருந்து ஒரு தொல்லை. ரூ. 37000/- ஐ வருட வட்டி 23% த்தில் கடன் தருகிறோம். எந்த டாக்குமென்ட்ஸ்யும் தேவையில்லை என இதுவரை 4 பேர் பேசிவிட்டார்கள்.

கடன் இல்லாம நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு! என திட்டுகிறேன். இருப்பினும், விக்கிரமதித்தனின் வாரிசுகள் போல சளைக்காமல் புதிது புதிதான ஏஜென்ஸிஸ் ஆட்கள் பேசுகிறார்கள்.

இது தொடர்பாக ஒரு பதிவொன்றும் போடலாமென்றும் விவரங்கள் திரட்டிக்கொண்டிருக்கிறேன்.

Mohan said...

//nondhakumar said...
நானும் உங்க கேஸ் தான். எஸ்.பி.ஐ. கார்டு கடந்த 2 வருடங்களாக பயன்படுத்திவருகிறேன்.

ஒழுங்காக கட்டி வருவதால், கடந்த வாரத்திலிருந்து ஒரு தொல்லை. ரூ. 37000/- ஐ வருட வட்டி 23% த்தில் கடன் தருகிறோம். எந்த டாக்குமென்ட்ஸ்யும் தேவையில்லை என இதுவரை 4 பேர் பேசிவிட்டார்கள்.

கடன் இல்லாம நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா உங்களுக்கு! என திட்டுகிறேன். இருப்பினும், விக்கிரமதித்தனின் வாரிசுகள் போல சளைக்காமல் புதிது புதிதான ஏஜென்ஸிஸ் ஆட்கள் பேசுகிறார்கள்.

இது தொடர்பாக ஒரு பதிவொன்றும் போடலாமென்றும் விவரங்கள் திரட்டிக்கொண்டிருக்கிறேன்.
//

வாங்க nondhakumar! அவசியம் ஒரு பதிவு போடுங்க!

ACE !! said...

//ஒரு தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் கேன்சல் செய்து விட்டேன்//

நான் கடன் அட்டை மூலம் தான் பணம் செலுத்தினேன் (இணையம் வழியாக). இது வரை எந்த தொந்திரவும் இல்லை.

என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா?? பிரச்சனை பொதுவாய் இருந்தால் இனிமேல் கவனமாக இருக்க உதவும்

முனாஸ் said...

நல்ல உபயோகமான தகவல்கள்.
டோகா-கத்தாரில் இருக்கும் எனக்கு க்ரடிட் காட் விடயத்தில் பல வித்தியாசமான & கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. மற்ற நாடுகளில் உள்ள வங்கி நடைமுறைகள் எப்படியோ தெரியாது. ஆனால் இங்கு உள்ள ஒரு Commercial Bank பல Hidden Charges மூலம் நம்மை ஏதோ ஒரு வகையில் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.. நாம் உஷாராக் இல்லாவிட்டால் பண நஷ்டம் நேரிடும். எனது அனுபவங்களில் சில:
(1)-Billing period: ஒவ்வொரு மாதமும் முதல் திகதியிலிருந்து கடைசி திகதி வரை (உ+ம்: February 1st to 28 Feb) & Payment Due Date is 15th of every month. ஆக 15 முதல் 45 நாட்கள் interest free credit கிடைக்கிறது. ஆனால் எனது வங்கியோ 15ம் திகதி வரை காத்திருக்க மாட்டார்கள். பத்து நாட்களுக்கு முன்பே அதாவது 5ம் திகதியே credit card payment deduction ஐ செய்துவிடுகிறார்கள். They deduct from my saving account.

கடந்த Feb 27ம் திகதி ஒரு பெரிய தொகைக்கு பொருட்கள் வாங்கினேன். ஆனால் 5 தினங்களின் பின் deduction was made (அனாவசிய வட்டி கட்ட விருப்பம் இல்லாததால் 100 % payment செய்வதாக standing order கொடுத்திருக்கிறேன்) கஷ்டமர் சர்வீசிடம் கேட்டால், அது Bank computer system is programmed to do automatic deduction on 5th of each month. We are sorry என்று பதில் கிடைத்தது.

(2) ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி மதியம் 1 மணிக்கு முன்பு கடந்த மாதத்தின் Closing Balance இனது 100 விகிதத்தையும் செலுத்தைவிட வேண்டும்.. நீங்கள் 99% pay செய்துவிட்டு 1% ஐ balance விட்டாலோ மொத்த Closing Balance க்கும் வட்டி கட்டவேண்டிவரும்.

January மாதத்தின் Closing Balance றியால் 11,000. February 5ம் திகதியே saving account இல் இருந்த மொத்த தொகை 10,500 ஐ deduct செய்து விட்டார்கள். பாக்கி 500 ஐ due date கழிந்து இரண்டு நாட்கள் தாமதமாக (17 Feb)செலுத்தியதன் காரணமாக 203 Riyals ஐ வட்டியாக அறவிட்டு விட்டார்கள்... அட பாவிகளா!! ஆரு ஊட்டு பணம்.. இப்படி கொள்ளை அடிக்கிறீங்களே !!!

(3) கடந்த மாதம் ஒரு அவசர online purchasing செய்ய வேண்டியிருந்ததால் Bank call centre ஐ அழைத்து 10% எக்ஸ்ரா க்ரடிட் தரமுடியுமா என்று கேட்டேன். ஓ..தாராளமாக தரலாம் என்றார் ஒரு ஊழியர். நான் கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக ஏதேனும் எக்ஸ்ரா கட்டணம் அறவிடுவீர்களா என்றும் கேட்டுவைத்தேன்.. அப்படி ஒன்றும் இல்லை this service is absolutely free என்று பதில் வந்தது.... ஆனால் கடந்த 5ம் திகதி Overlimit Fee - Riyal 250 என்று online transaction details காட்டியது. அப்புறம் வங்கி மனேஜரை கண்டு சண்டை எல்லாம் போட்டு என் பணத்தை காப்பாற்ற வேண்டியிருந்தது... telephone calls are recorded by the call centre என்பதால் சத்தியம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை :))

இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கிறதோ ????

Sam - தோகா-கத்தார்

Mohan said...

//ACE !! said...
ஒரு தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் கேன்சல் செய்து விட்டேன்//

நான் கடன் அட்டை மூலம் தான் பணம் செலுத்தினேன் (இணையம் வழியாக). இது வரை எந்த தொந்திரவும் இல்லை.

என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா?? பிரச்சனை பொதுவாய் இருந்தால் இனிமேல் கவனமாக இருக்க உதவும்
//

வாங்க ACE! தங்கள் வருகைக்கு நன்றி!
முதலில் என்னை யோசிக்க கூட விடாமல் அந்த தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்காக என்னை சேர்த்து விட்டார்கள். அதன் பிறகுதான் இணையத்தில் பார்த்தபோது அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் பல பேருக்கு 6 மாதம் ஆகியும் அடையாள அட்டையைகூட அனுப்பாமல் இருந்தது தெரிய வந்தது. தெரிந்த முகவர் ஒருவரும், கிரெடிட் கார்டு மூலமாக அல்லாமல் நேரிடையாக ஏதேனும் முகவர் மூலம் சேர்வதே சிறந்தது என்று சொன்னார்.

அதற்க்கு அப்புறம் அந்த பாலிசியை கேன்சல் செய்வதற்கு நான் பட்ட பாட்டை சொல்ல இயலாது. மெண்டலி டார்ச்சர் செய்து விட்டார்கள். வெறுத்து போய் கிரெடிட் கார்டையே கேன்சல் செய்து விட்டேன்! அப்புறம் நான் இன்சூரன்ஸ் பாலிசி போட்டது கிரெடிட் கார்டு கஸ்டமர் கேர் சென்டெர் மூலமாக. நீங்கள் உங்கள் விருப்பத்தின் பேரில் பணம் மட்டும் கிரெடிட் கார்டு மூலமாக கட்டி இருப்பீர்கள் என்று நினைக்கிறன். என்னால் பணம் மொத்தமாக கட்ட முடியாததால் தவணை முறையில் கட்ட நேர்ந்ததால் வட்டி அதிகமாக இருந்தும் நான் பாலிசியை கேன்சல் செய்ய காரணமாகி விட்டது.

Mohan said...

வாங்க முனாஸ்! தங்கள் வருகைக்கும், அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!